பெங்களூரு: நடிகர் ராஜ்குமார் நினைவு மண்டப திறப்பு விழாவில் பங்கேற்க வந்த ரஜினிகாந்த் தனது சிறப்புரையின்போது ராஜ்குமார் இறந்த வருடத்தையே மாற்றி பேசியது ராஜ்குமார் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ராஜ்குமாரின் நினைவு மண்டபம் ரூ.7 கோடி செலவில் பெங்களூரு நந்தினி லேஅவுட்டில் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா இன்று நடந்தது. முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த அந்த விழாவில் ராஜ்குமார் குடும்பத்தார் மட்டுமின்றி, நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, நடிகைகள் சரோஜாதேவி, தாரா உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான ராஜ்குமார் ரசிகர்களும் கூடியிருந்தனர்.
அந்த கூட்டத்தில் பேசிய ரஜினிகாந்த் "பேடர கண்ணப்பா என்ற படத்தில் தொடங்கி ராஜ்குமார் என்ற குதிரை ஓடத் தொடங்கியது. 1954ல் தொடங்கிய ராஜ்குமார் என்ற குதிரையின் சினிமா பயணம் 2008ல் முடிந்தது. அதாவது, அவர் சினிமா பயணத்தை தொடங்கிய ஆண்டில் 54ம் எண் வருகிறது. அவரது கேரியரும் 54 வருடம் தொடர்ந்தது" என்றார்.
ஆனால் நடிகர் ராஜ்குமார் இறந்தது, 2006ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதியாகும். ராஜ்குமாரின் சினிமா அனுபவத்தையும், அவர் நடிக்க ஆரம்பித்த வருடத்தையும் 54ம் எண்ணுடன் ஒப்பிட்டு பேசும் அளவுக்கு விவரங்களை சேகரித்து தயாராக வந்திருந்த ரஜினிகாந்த், எப்படி ராஜ்குமார் இறந்த ஆண்டை தவறாக கணக்கிட்டார் என்பது புரியவில்லை.
வெறுமனே, 2008 என்று கூறியிருந்தால் கூட வாய் தவறி அப்படி ரஜினிகாந்த் சொல்லியிருக்கலாம் என்று ரசிகர்கள் நினைத்திருப்பார்கள். ஆனால் 54 என்ற எண்ணை ஒப்பிட்டு பேசிய ரஜினி எப்படி தவறிழைக்கலாம் என்று பொறுமுகின்றனர் ராஜ்குமார் ரசிகர்கள். ஏனெனில் பேடர கண்ணப்பா திரைப்படம் வெளியானது ரஜினிகூறியபடியே 1954ம் ஆண்டுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment